31 Aug 2021

பாடத்திட்டத்திலிருந்து மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி எழுத்துகள் நீக்கம் - - டில்லி பல்கலைக்கழகத்திற்கு தமுஎகச கண்டனம்

எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதென டில்லி பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

இந்துத்துவாவினர் பாரதிய ஜனதா கட்சியிடமுள்ள ஒன்றிய அரசதிகாரத்தைப் பயன்படுத்தி தமது கருத்தியலுக்கு இணங்காத வரலாறு அறிவியல் சமூகவியல், கலை இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவருகின்றனர். நீக்கப்படும் அந்தப் பாடங்களுக்குப் பதிலாக இந்துத்துவக் கருத்தியலுக்கு இசைவாக வரலாற்றைத் திரித்து எழுதிய பொய்களையும், அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களையும், கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களை நியாயப்படுத்தும் விதமாக இலக்கியப் பெறுமதியற்று எழுதப்பட்ட குப்பைகளையும் பாடங்களாக திணித்துவருகிறார்கள். 

கல்விப்புலத்தின் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகங்களும் பாடத்திட்டக் குழுக்களும் தமது பொறுப்பிலிருந்து பிறழ்ந்து ஆளும் கட்சியின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியும் இழிநிலைக்குத் தாழ்ந்துவிடக்கூடாதென தமுஎகச வலியுறுத்துகிறது.  இந்துத்துவாவினரது அரசதிகார அழுத்தத்திற்குப் பணிந்து  எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதென்னும் டில்லி பல்கலைக்கழகத்தின் முடிவை ஏற்க முடியாது. நீக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ள அப்பாடங்கள் பாடத்திட்டத்தில் தொடரவேண்டும் என்கிற முழக்கம் வலுப்பெற ஜனநாயத்தில் நம்பிக்கையுள்ள யாவரும் குரலெழுப்ப வேண்டுமென தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )  

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

26.08.2021