26 Jul 2021

மொழியறிஞர் இரா.இளங்குமரனார் மறைவு - தமுஎகச இரங்கல்

தமிழகத்தின் மூத்த மொழியறிஞர், ஆய்வறிஞர், தமிழிய வரலாற்று வரைவாய்வாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர் இரா.இளங்குமரனார் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலி திட்டத்தில் மொழியறிஞராக செயலாற்றிய அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர். திருக்குறளுக்கு பேருரை எழுதியவர். காணாமல் போய்விட்டது எனக் கருதப்பட்ட தமிழ் இலக்கண நூலாம் காக்கைப் பாடினியத்தை கண்டுபிடித்து பதிப்பித்தவர். தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுகொண்ட அவர், தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்பிழிவான ‘தேவநேயம்’ பத்துத் தொகுதிகளை தொகுத்தவர். அதேபோன்று செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் 14 தொகுதிகளைக் கொணர்ந்தவர். சமஸ்கிருதச் சடங்குகளை மறுத்து குறள் வழியில் தமிழ் வழியில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை தமிழில் நடத்துவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்தவர். அவருடைய தனித்துவமான ஆய்வுகள் அவருக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் தமிழ் ஆய்வுலகத்திற்கும் தமுஎகச சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

மதுக்கூர் இராமலிங்கம் மாநிலத்தலைவர் (பொ)

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

26.07.2021