21 Sept 2021

கலை இலக்கியம் இயக்கமென வாழ்ந்தவர் தோழர் ஜெயக்குமார்

- தமுஎகச செவ்வஞ்சலி

தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜெயக்குமார், குமரி மாவட்டத்தில் மிடாலக்காடு என்னும் ஊரில் 27.05.1963 அன்று பிறந்தவர். சிறு வயது முதலே தனது தந்தையின் வழியில் இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் தனது அண்டை ஊரான குறும்பனையில் இடதுசாரி இயக்கங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திவந்த சமூகவிரோதிகளை எதிர்கொள்ள அந்தத் தோழர்களுக்கு வழிகாட்டியவர். அத்துடன், இரவு பகல் பாராமல் தோழர்களோடு களத்தில் நின்று போராடி அங்கு இடதுசாரி இயக்கத்தை நிலைநிறுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.

அதைத் தொடர்ந்து அறிவொளி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டினார். குறிப்பாக மேடை நாடகத்தில் தீவிரமாகப் பயணித்தார். குமரியின் மேடை நாடக முன்னோடி என அறியப்படுகிற தோழர் இரணியல் கலையுடன் இணைந்து பல்வேறு மேடை நாடகங்களை அரங்கேற்றினார். நடிக்கவும் செய்தார். பின்னர் தமுஎகசவில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார். இவர் மாவட்டச் செயலாளராக செயல்பட்ட காலத்தில் தமுஎகசவை குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக்கினார்.  

முட்டத்தில் மாநில அளவிலான நாடகப் பயிற்சி முகாமை 10 நாட்களுக்கு சிறப்பாக நடத்திக் காட்டினார். குமரியின் சமூகச் சீர்திருத்தவாதிகளில் முன்னோடியான அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் இணைக்க வலியுறுத்தும் கோரிக்கை மாநாட்டை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் நடத்தி முடித்தார். தேசிய நாடகப்பள்ளியோடு இணைந்து மார்த்தாண்டத்தில் தேசிய நாடக விழாவைச் சிறப்பாக நடத்தினார். தாகம் கலைக்குழு, தாகம் பதிப்பகம், மிடாலக்காடு ஸ்போர்ட்ஸ் கிளப் போன்ற அமைப்புகளை உருவாக்கி  இன்றளவும் அவற்றை வழிநடத்தி வந்தார். மிடலக்காட்டில் அரசு நூலகம் அவரது முன்முயற்சியினாலேயே அமைந்தது. 

இயக்கத்தின் மீது தீராத பற்றும் நம்பிக்கையும் கொண்ட இவர் தனது குடும்பத்தில் அனைவரையும் இடதுசாரி இயக்கத்தில் பயணிக்கச் செய்து வெற்றி கண்டவர். இவரது இணையர் தொடர்ந்து பாலப்பள்ளம் பேரூராட்சியில் தலைவராகச் செயல்படும் அளவிற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தார். 

சிறுநீரகங்கள் செயலிழந்து தீவிர சிகிச்சைக்கு ஆளாகி தொடர்ந்து செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டபோதும் தோழர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வழிநடத்துவதில் மிகவும் முக்கிய பங்காற்றி வந்தார். சாத்தூரில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு இயக்கத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியவர். குமரியில் தமுஎகச மாநில மாநாட்டை நடத்திட வேண்டும் என்கிற  பெருவிருப்பத்தை நம்முன்னே வைத்துவிட்டு இன்று காலமாகிவிட்டார் தோழர் ஜெயக்குமார்.  கலை இலக்கியம் அமைப்பாக்கம் தோழமை என முன்னுதாரணமாகச் செயல்பட்டு மறைந்துள்ள தோழர் ஜெயக்குமார்  அவர்களுக்கு தமுஎகச  மாநிலக்குழு வீரவணக்கம் செலுத்துவதுடன் அவரை இழந்து வாடும் குடும்பத்தாரின் துயரில் பங்கெடுக்கிறது.
இப்படிக்கு,
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொ) 

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

21.09.2021