27 Aug 2024

மதச்சார்பின்மைக்கு மாறாக பழனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை திரும்பப்பெறுக!

தமுஎகச வலியுறுத்தல்

இந்து சமய அறநிலையத்துறையின் முன்னெடுப்பில் பழனியில் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில், 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சித்த மருத்துவத்தை இனிவரும் காலங்களில் தமிழர் சித்த மருத்துவம் என்று அழைத்திட தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தும் பழனியில் தமிழர் சித்த மருத்துவர் ஆராய்ச்சி மையம் அமைத்திட பரிந்துரைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் வரவேற்கத்தக்கவை.

கோவில்களில் திருப்பணி மேற்கொள்வது தொடர்பான சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது துறை சார்ந்த நடவடிக்கை என்ற அளவில் பொருத்தமானதே. ஆனால், முருகன் திருக்கோவில்களில் மாணவ-மாணவிகளைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, இந்தத்துறையின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்துவது, துறையின் கீழ் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி போட்டிகள் நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

கல்வி நிலையங்கள் சிலவற்றை இந்துசமய அறநிலையத்துறை நடத்தினாலும் மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இக்கல்வி நிலையங்கள் நடைபெறவேண்டும். மத போதனைக்காக இந்தக் கல்வி நிலையங்கள் உருவாக்கப் படவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். மாறாக பள்ளி மாணவர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் போன்றவற்றை கல்வி நிலையங்களே நடத்துவது என்பது மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

மத நம்பிக்கை என்பது தனிமனிதர்களின் விருப்பத்தேர்வாக இருக்கவேண்டுமேயன்றி எந்தவொரு மதக்கோட்பாட்டையும் புகுத்துவது மதச்சார்பற்ற அரசுகளுக்கு பொருத்தமானது அல்ல.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கல்வித்துறையை காவிமயமாக்கவும் கார்ப்பரேட் மயமாக்கவும் துடிக்கிறது. ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்காத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்க மறுத்து பழி வாங்குகிறது. தமிழ்நாடு அரசு தமிழகத்திற்கென்று தனி கல்விக்கொள்கை என்று அறிவித்து அதற்கான நிபுணர் குழுவையும் அமைத்து அதன் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. அதைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்நிலையில், ஒன்றிய அரசு பாணியிலேயே மாநாட்டில் சில தீர்மானங்கள் அமைந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. அனைத்துச் சாதியினரும் அனைத்துக் கோவில்களிலும் பாலின வேறுபாடின்றி அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை விரைவுபடுத்துவதும் தமிழில் குடமுழுக்கு உட்பட வழிபாட்டில் தாய்மொழியை முதன்மைப்படுத்துவதும், காலத்திற்கேற்ப மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளாகும். அதே நேரத்தில், முத்தமிழ் முருகன் மாநாட்டில் மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள  மூன்று தீர்மானங்களையும் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்

 ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

27.08.2024

8 Jul 2024

தமுஎகச பொன்விழா தொடக்கம்






தமுஎகச பொன்விழா ஆண்டு இலட்சினை வெளியீடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா இலச்சினை இன்று (2024 ஜூலை 7) கோவையில் வெளியிடப்பட்டது. 

வரைந்தளித்த ஓவியர்: பிரபாகரன் காசிராஜன்



8 Apr 2024

இப்போதில்லாவிட்டால்…

தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் வேண்டுகோள்


    நாட்டின் விடுதலைக்காகத் தீரமுடன் போராடிய மக்களின் விருப்பார்வங்களிலிருந்து உருவான நமது அரசியல் சட்டத்தை ஒழித்துக்கட்ட, அன்னியராட்சிக்கு சேவகம் செய்து வந்தவர்களின் கூட்டுமுகமான பாஜக ஆட்சி தொடர்ந்து முயற்சித்துவருகிறது. அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கு ஒத்திசைவாகவும் சுதந்திரமாகவும் இயங்கவேண்டிய நாடாளுமன்றம்/ சட்டமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பாஜகவின் குறுகிய மதவாதத்திற்கும் கார்ப்பரேட் சுரண்டலுக்கும் கீழ்ப்படியும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டுள்ளன. 

    கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது மனித சுபாவம். எனவேதான் நமது அரசியல் சாசனம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அனைவருக்குமே உரிமையாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றமும்கூட கருத்துரிமையையும் விமர்சிக்கும் உரிமையையும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு கருத்தை வெளிப்படுத்திவிட்டு சுதந்திரமாக இருந்து விடவே முடியாது என்கிறது ஒன்றிய பாஜக ஆட்சி. மனிதநிலையிலிருந்து நம்மைத் தாழ்த்தும் இந்தக் கொடுங்கோல் ஆட்சியை இப்போது வீழ்த்தாவிட்டால் இனி தேர்தல் என்பதே பழங்கதையாகிப்போகும்.

    தமது முற்போக்கான கருத்துகளுக்காக சமூகத்தின் நன்மதிப்பினைப் பெற்றிருந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற சிந்தனையாளர்கள் அவர்களது கருத்துகளுக்காகவே சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள்.

    ஒன்றிய பாஜக அரசு, தனது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள்மீது விமர்சனமும் மாற்றுக்கருத்தும் கொண்டுள்ள ஆளுமைகள் பலரையும் பீமாகோரேகான் பொய்வழக்கில் சிக்கவைத்து ஆண்டுக்கணக்கில் சிறைவைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பெறத் துணைநின்ற ஸ்டேன்ஸ் சுவாமிக்கு கைதிக்குரிய உரிமைகளை மறுத்துச் சிறையிலேயே சாகடித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவியது. உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள்  மீது உபா போன்ற கொடிய சட்டங்களைப் பாய்ச்சுகிறது. எஞ்சியுள்ள மக்களும்கூட நாட்டைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாக உணருமளவுக்கு அரசின் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் மூர்க்கமடைந்து வருகின்றன. அச்சமற்று வாழ்வதற்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் தடையாக உள்ள எதையும் எதிர்க்கிற இயல்புணர்விலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை  மேற்கொள்வதாக இந்தக் கூட்டறிக்கை அறிவிக்கிறது.  

**

        வாக்குரிமையின் மூலம் மக்கள் வழங்கியத் தீர்ப்புகளைத் திருடுகிறது  பாஜக. தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற லஞ்சப்பணத்தை வாரி இறைத்து இதுவரை 182 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஒன்பது மாநில அரசுகளைக் கவிழ்த்து தனது ஆட்சியை அமைத்திருக்கிறது. தேர்தல் களத்தை சமமற்றதாக்கும் விதமாக எதிர்க்கட்சிகளின் வங்கிக்கணக்கை முடக்குவது, அரசின் பல அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களைச் சிறையிலடைப்பது என நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சிதைத்துவருகிறது பாஜக.

**

        உணவு, உடை, மொழி, சமயம், தெய்வம், வழிபாட்டு முறை, நம்பிக்கை, கொண்டாட்டம், சடங்கு என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தனித்துவம் கொண்ட மக்கள் சமுதாயங்கள் இணங்கிவாழும் பேறுபெற்றது நம்நாடு. ஒளிரும் வானவில்லைப் போன்ற இந்தப் பன்மைத்துவம்தான் நம் நாட்டின் அழகு, வலிமை. அதனாலேயே விடுதலைப் போராட்டம் கட்டமைத்த மக்கள் ஒற்றுமைதான் இந்திய வளங்களிலேயே மிகவும் செறிவானதெனப் போற்றப்படுகிறது. ஆனால் இந்தப் பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் அடித்து நொறுக்கித் தட்டையாக்கி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே கடவுள், ஒரே தேர்தல் எனும் ஒரே..ஒரே முழக்கங்களோடு ஒருநபர் வல்லாதிக்கத்தை நோக்கி நாட்டை  நகர்த்துகிறது பாஜக. 

**

    சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பாஜகவின் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனியச்செய்துள்ளன. அகண்ட பாரதம் என்னும் அதன் முழக்கம் இறையாண்மையுள்ள அண்டைநாடுகளைச் சீண்டுவதாக உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம், பட்டினியற்ற நிலை, கருத்துரிமை, ஊடகச் சுதந்திரம்,  பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உலகளாவிய அளவில் இந்தியா பலபடிகள் பின்தங்கியிருப்பதற்கு பாஜக ஆட்சியே காரணம்.

    கொரானா பேரிடரை அறிவியலுக்குப் புறம்பான வகையில் கையாண்டதுடன் அதையும் தனது இஸ்லாமிய வெறுப்பரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டது பாஜக ஆட்சி. பொது முடக்கக் காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்ட அது,        

    புலம்பெயர்த் தொழிலாளர்களை நிர்க்கதியாக்கி விரட்டியது. தமது நலன்களுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை பகைநாட்டுப் படையினர் போல சித்தரித்து தாக்குதல் நடத்தி பலரை கொன்றது.    

    உலகம் இதுவரை கண்டிராதபடி 7.5 இலட்சம் கோடி ரூபாயளவுக்கு நிதி முறைகேடுகளைச் செய்துள்ளது  பாஜக ஆட்சி. அது தேர்தல் பத்திரம் மூலம் செய்துள்ள டிஜிட்டல் வழிப்பறியைப் பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது.

    பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம் சமகாலத்திற்குரியதாக இருக்கவில்லை. அங்கு பெண்கள், தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினரது சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், வீடுகளை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குதல், அவர்களது வாழ்வாதாரங்களை முடக்குதல், அவர்கள் மீது வெறுப்பினைப் பரப்புதல் ஆகிய கொடூரங்கள் தீவிரமடைந்துள்ளன. மதப்பகைமையை உண்டாக்கி மக்களைப் பிளவுபடுத்திச் சமூகத்தை எப்போதுமே பதற்றத்தில் வைத்திருக்கும் பாஜக, தமிழ்நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் எவ்வகையிலும் ஏற்புடைய கட்சியல்ல. ஆனாலும் அந்தக் கட்சி அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு மறைமுகமாக நிழலாட்சி நடத்தி தமிழ்நாட்டின் நலன்களைக் காவுவாங்கியது.

**

    தமிழர் பண்பாட்டின் தொன்மையை எடுத்தியம்பும் கீழடி அகழ்வாய்வைப் பாதியில் நிறுத்தியது, ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுத்தது, பிறப்பால் எவ்வுயிரும் சமம் என முழங்கிய திருவள்ளுவர், அய்யா வைகுண்டர், சன்மார்க்கர் வள்ளலார் ஆகிய பேராளுமைகளை சாதிய, சனாதனவாதிகளாகச் சிறுமைப்படுத்துவது,  தமிழுக்குப் பெருமை சேர்த்த ராபர்ட் கால்டுவெல்லை இழிவுபடுத்துவது, நீட் விலக்கிற்கு ஒப்புதல் வழங்க மறுப்பது, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க மறுப்பது, பேரிடர்க்கால நிவாரணத்தொகையை வழங்க மறுத்தது என தமிழ் தமிழர் தமிழ்நாடு விரோதப்போக்குடன் செயல்படும் பாஜகவை இந்தக்காலம் முழுவதும் அதிமுகவும் பாமகவும் ஆதரித்து வந்துள்ளன. இஸ்லாமியரைத் தனிமைப்படுத்தும் நோக்குடன் திணிக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டம் அதிமுக பாமக ஆதரவினால் தான் நிறைவேறியது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் எதிராளிகளாகக் காட்டிக்கொண்டு இருவேறு கூட்டணிகளாக போட்டியிட்டாலும் இரண்டையும் நிராகரிப்பதே தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததாகும்.

    இந்தியாவின் வரலாற்றை இந்தியத்தன்மையுடன் எழுதப்போவதாகச் சொல்லிக்கொண்டு அதற்குகந்த குழுவினை அமைத்துள்ளது பாஜக ஆட்சி. திராவிடர்களின் சிந்துவெளிப் பண்பாட்டை ஆரியப் பண்பாடாகவும், ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகளாகவும், தமிழ் உள்ளிட்ட இந்தியமொழிகள் அனைத்திற்கும் மூலமொழி சமஸ்கிருதமே என்றும் ஒரு கட்டுக்கதையை வரலாறு என்று திரிப்பதே இக்குழுவின் பணி. பாஜகவின் இந்த வரலாற்று மோசடிக்கு எதிரான தீர்ப்பினை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கி, சிந்துவெளிப் பண்பாட்டை ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்ததன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைத் தொடங்குவோம்.

**

    மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமையையும் பன்மைத்துவத்தையும் தனித்துவத்தையும் காப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இந்தியா கூட்டணியை ஆதரிப்பது எழுத்தாளர்கள் கலைஞர்களின் சமூகப்பொறுப்பு எனக் கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களும் அவ்வாறே இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.


எஸ்.வி. ராஜதுரை

அ. மார்க்ஸ்

வே.மு. பொதியவெற்பன்

பாமா

கவிஞர் இந்திரன்

க. பஞ்சாங்கம்

பெருமாள் முருகன்

பசு கவுதமன்

அரிமளம் சு. பத்மநாபன்

சமயவேல்

அ.ராமசாமி

மனுஷ்யபுத்திரன்

இமையம்

அறம்

கலாப்ரியா

சக்தி ஜோதி

சூர்யா சேவியர்

ஆழி செந்தில்நாதன்

நா. முருகேச பாண்டியன்

இரா. எட்வின்

கமலாலயன்

நீதிமணி

நக்கீரன்

யுக பாரதி

இரா. முருகவேள்

அ.முத்துக்கிருஷ்ணன்

மீரான் மைதீன்

யவனிகா ஸ்ரீராம்

கீரனூர் ஜாகீர் ராஜா

கவின்மலர்

விஜய் ஆனந்த்

சம்சுதீன் ஹீரா

அ. பாக்கியம் சங்கர்

அ. ஜெகநாதன்

எம்.எம். தீன்

சுதீர் செந்தில்

மதிக்கண்ணன்

சுகுணா திவாகர்

கவிதா பாரதி

தமிழ்மகன்

விஷ்ணுபுரம் சரவணன்

புலியூர் முருகேசன்

பழநி ஷஹான்  

அரி சங்கர்

யெஸ். பாலபாரதி

காமாட்சி

சக்தி சூர்யா

ந. இளங்கோ

சிலம்பு செல்வராஜ்

இ.பா. சிந்தன்

முகம்மது யூசுப்

ஷக்தி

நிவேதிதா லூயிஸ்

மதுக்கூர் ராம­லிங்கம்

ஆதவன் தீட்சண்யா

அருணன்

ச.தமிழ்ச்செல்வன்

சிகரம் செந்தில்நாதன்

சைதை ஜெ

நந்தலாலா

உதயசங்கர்

இலட்சுமிகாந்தன்

நாறும்பூநாதன்

எஸ்.ஏ. பெருமாள்

பக்தவச்சலபாரதி

சு.பொ. அகத்தியலிங்கம்

மயிலை பாலு

பிரளயன்

எம். சிவக்குமார்

வெண்புறா சரவணன்

கா. பிரகதீஸ்வரன்

ரோஹிணி

நவகவி

ஜீவி

தேனிசீருடையான்

ஸ்ரீரசா

முத்துநிலவன்

சுந்தரவள்ளி

அ.உமர்பாரூக்

ம.காமுத்துரை

ஜா.மாதவராஜ்

மலர்விழி

அய். தமிழ்மணி

ஆர். நீலா

ஏகாதசி

அ.கரீம்

எஸ்.இலட்சுமணப்பெருமாள்

ஜனநேசன்

கரிசல் குயில் கிருஷ்ணசாமி

இரா.தெ.முத்து

கிருஷி

எஸ்.காமராஜ்

கோவை சதாசிவம்

இரா. தனிக்கொடி

மு.முருகேஷ்

தக்கலை ஹலீமா

நிறைமதி

அ. பகத்சிங்

இக்பால்

சோழ நாகராஜன்

மதுரை நம்பி

அல்லி உதயன்

மு. ஆனந்தன்

நா.வே. அருள்

சிராஜுதீன்

அருள் செல்வி

முரசு ஆனந்த்

இளங்கோ கார்மேகம்

ஜீவபாரதி

கரன் கார்க்கி

ச.மதுசுதன்

செந்தில்

ராஜமாணிக்கம்

ராஜசங்கீதன்

ராஜிலா ரிஸ்வான்

நேசமித்திரன்

பெ.ரவீந்திரன்

எஸ். சண்முகம்

சிந்து ஜா

அமர்நாத்

தவில் விநாயகம்

ச. ப்ரியா

தங்கமுருகேசன்

ஜின்

பூபாளன்

அரவிந்த் ரவிச்சந்திரன்

லி.பா. சாரதி

ராசி.பன்னீர்செல்வம்

கவிஞர் கதிரை

ஜீவசிந்தன்

வல்லம் தாஜுபால்

ஓவியர் சரண்ராஜ்

ஓவியர் உமாபதி

பா. மகாலட்சுமி

முனைவர் இராச. கலைவாணி

நீலமேகம்

கவிஞர் ராசாராமன்

இளம் கவிஞர் சத்தியபிரியன்

பாடகர் உத்தமன்

வைகறை மஞ்சுளா

ரத்தின விஜயன்

சசி ரேகா

சரவணகாந்த்


22 Mar 2024

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதா? - தமுஎகச கண்டனம்

தனது இசைப்புலமைக்காகவும் துணிச்சலான எழுத்துக்காகவும் சமூகச் செயல்பாடுகளுக்காகவும் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றுள்ள கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சென்னை மியூசிக் அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்குரியவர் என்ற வகையில் 2024 டிசம்பர் இறுதியில் நடைபெறவுள்ள மியூசிக் அகாடமியின் 98ஆம் ஆண்டு இசை நிகழ்வுகளுக்கு கிருஷ்ணா தலைமை வகிப்பார். இம்முடிவினை எதிர்த்தும், கிருஷ்ணா தலைமை வகிக்கும் நிகழ்வில் பங்கேற்கமுடியாது என்றும் கர்நாடக இசைச் சகோதரிகள் எனப்படும் ரஞ்சனி – காயத்ரி ஆகியோர் தமது சமூக ஊடகப்பக்கத்தில் எழுதியுள்ள பதிவின் சொல்லும் பொருளும் கடும் கண்டனத்திற்குரியவை.



பார்ப்பனர்களை இனஅழிப்பு செய்யும்படி வெளிப்படையாகத் தூண்டிய, பார்ப்பனப் பெண்களை இழிவுபடுத்திய, பார்ப்பனர் மீதான வெறுப்புணர்வை இயல்புணர்வாக மாற்றிய பெரியாரைப் புகழ்ந்து பாடிவரும்  இந்த கிருஷ்ணாவுடன் (பெருமாள் முருகன் எழுதிய “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடல்) தங்களால் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று பொருமியுள்ளனர். பெரியார் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பலமுறை நிரூபிக்கப்பட்ட பின்னும்கூட அதே பொய்களை முன்வைத்து அவதூறு செய்துள்ளனர். 

அகில இந்திய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் அண்ணாமலையும் தங்களுக்குப் பிடித்த தலைவர்கள் என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிடும் இச்சகோதரிகளால் கிளப்பிவிடப்பட்ட “கிருஷ்ணா எதிர்ப்பு” விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர், கிருஷ்ணமோகன் – ராம்குமார் மோகன் சகோதரர்கள் ஆகிய கலைஞர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. அவர்களும் கிருஷ்ணா தலைமையிலான விழாவில் பங்கேற்றால் தங்களது கெளரவத்துக்கு இழுக்கு இசைக்குத் தீட்டு என்கிற அளவுக்கு சகிப்பின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். சித்ரவீணை ரவிக்கிரண் என்பவர் என்னும் ஒருபடி மேலேபோய் ஏற்கனவே தனக்கு மியூசிக் அகாதமி வழங்கியிருந்த சங்கீத கலாநிதி விருதினை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.  
 
கர்நாடக இசையுலகில் நிலவும் பார்ப்பனராதிக்கம், பாலினப் பாகுபாடு, மதச்சாய்மானம், மேட்டிமைத்தனம், பழமைவாதம் ஆகியவற்றை கண்டித்தும், கர்நாடக இசையை ஜனநாயகப்படுத்தவும் எல்லா இசைமரபுகளுடனும் வகைமைகளுடனும் இணக்கம் பேணவும் கிருஷ்ணா சுதந்திரமாக பாடியும் எழுதியும் இயங்கியும் வருவது குறித்த ஒவ்வாமை மற்றும் வெறுப்பிலிருந்து  நொதித்துவருகிறது இந்த எதிர்ப்பு. மாற்றுக்கருத்தாளர்களை ஒதுக்கும் இந்த மனோபாவத்தைக் கண்டித்து, எல்லா கருத்தோட்டங்களையும் உள்ளடக்கியதான  கலைச்செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் குரலெழுப்ப வேண்டுமென தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 
 
தோழமையுடன்
 மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர்
 
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

 21.03.2024

1 Feb 2024

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2023

01.02.2024

2023ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2023ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் மூன்று பிரதிகள் 2024 பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்) 
மதுரை- 625001  தொலைபேசி: 0452-2341669 


குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தனிநபர் இணைய இணைப்புகளை 73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும். 

தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் விருதுத்தொகை ரூ.10,000/,  சான்றிதழ்  ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும். 

விருதுகள்

1. தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல் 

2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது: நாவல் 

3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு 

4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: அல்புனைவு  (நான் ஃபிக்‌ஷன்) நூல் 

5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு 

6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு 
7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு 

8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது:
 குழந்தைகள் இலக்கிய நூல்  

9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் 

10. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் 

11. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்


பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:   

12. மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி  விருது: 
நாட்டுப்புறக் கலைச்சுடர்

13. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்

14. த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்

15. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை

வாழ்த்துகளுடன்,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

15 Nov 2023

தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு தமுஎகச புகழஞ்சலி

விடுதலைப்போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி செம்மலர் இலக்கிய ஏட்டினைத் தொடங்குவதற்கு உந்துசக்தியாக இருந்தவர்களுள் தோழர் சங்கரய்யாவும் ஒருவர். செம்மலரில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் 34பேர் 1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23,24 தேதிகளில் மதுரையில் கூடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தனர். இந்தக் கூட்டத்தில், தமிழக பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.நல்லசிவன், கே.முத்தையா ஆகியோரோடு தோழர் என்.சங்கரய்யாவும் பங்கேற்று முற்போக்கு எழுத்தாளர்களுக்கு என்ற ஓர் அமைப்பினை உருவாக்கவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தார். 1975ஆம் ஆண்டு ஜூலை 12, 13 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற தமுஎச முதல் மாநாட்டில் பங்கேற்று தோழர் சங்கரய்யா வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், “கடந்த காலத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் அழிந்ததுபோல், இது அழிந்துவிடக்கூடாது என்றார்கள். இது அப்படி அழியாது. ஏனென்றால், இதற்கு தெளிவான கொள்கை அடிப்படை உண்டு” என்று முழங்கினார். முதல் மாநாட்டில் அவர் கூறியதுபோல, தமுஎகச தமிழகத்தின் மிகப்பெரும் கலை, இலக்கிய பண்பாட்டு அமைப்பாக உயர்ந்தோங்கி வளர்ந்து நிற்பது கண்டு அவர் பேருவகை கொண்டார்.
தமுஎகச நடத்திய பல்வேறு மாநில மாநாடுகளிலும், பயிலரங்குகளிலும் பங்கேற்று அவர் ஆற்றிய உரை தமுஎகச வளர்ச்சிக்குத் தடம் வகுத்து கொடுத்தது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற தமுஎகசவின் 15-வது மாநில மாநாட்டின் போது நாட்டு விடுதலையின் பவள விழாவையும் இணைத்துக் கொண்டாடினோம். இந்த மாநாட்டில், ஆக.14 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாநாட்டில் ஏற்றப்படும் தேசியக்கொடியை தோழர் சங்கரய்யா எடுத்துக் கொடுத்தார். அவரால் எடுத்தளிக்கப்பட்ட அந்தக் கொடியே தமிழகம் முழுவதும் பயணித்து மாநாட்டில் ஏற்றப்பட்டது. இவ்வாறாக தமுஎகசவின் அனைத்து நிகழ்வுகளிலும் தம்மை அவர் நெருக்கமாக பிணைத்துக் கொண்டிருந்தார். 
 
சங்ககால இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருந்த அவர், முற்போக்கு படைப்பாளர்களின் படைப்புகளை உடனுக்குடன் படித்து அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார். தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான அவர், தன்னுடைய உரைகள் அனைத்திலும் நம்பிக்கை விதைகளை விதைத்து வந்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட உருவாக்கத்தின் போது அவர் நிகழ்த்திய உரைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. 
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கித் தந்த ஆதி விதைகளில் ஒருவரான தோழர் சங்கரய்யாவுக்கு அமைப்பின் விழுதுகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றன. சமநீதி, சமூக நீதி, படைப்பதற்கான பயணத்தில் தோழர் சங்கரய்யாவின் குரல் என்றென்றும் நம்மை வழிநடத்தும். தோழர் சங்கரய்யாவுக்கு வீரவணக்கம்.


தோழமையுடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்  ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்.
15.11.2023

10 Oct 2023

தமுஎகச மாநிலச்செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்


2023 அக்டோபர் 7 அன்று தேனியில் மாநிலத்தலைவர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற தமுஎகச மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 

1. ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்று பீற்றிக்கொண்டே ஜனநாயகத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றான ஊடகங்களை ஒடுக்கிவருவது தொடர்பாக மோடி அரசு உலகளாவிய கண்டனங்களைப் பெற்றுவருகிறது. ஆனாலும் அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பறிப்பதில் ஒன்றிய அரசு மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது. ஒன்றிய அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது மாற்றுக்கருத்தினை வெளிப்படுத்துகிற, கூர்மையாக விமர்சிக்கிற ஆளுமைகள் மீதும் ஊடகங்கள் மீதும் அமைப்புகள் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஒடுக்கும் இழிநிலை தொடர்கிறது. இதன் தொடர்ச்சியில் நியூஸ் க்ளிக் இணைய இதழை முடக்குவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு தமுஎகச தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துகொள்கிறது. கைது செய்யப்பட்டுள்ள நியூஸ் க்ளிக் ஆசிரியரை உடனே விடுவிப்பதற்கும், இதழை மீண்டும் சுதந்திரமாக  வெளியிடும் சூழலை உருவாக்குவதற்கும் குரலெழுப்புமாறு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 

2. எழுபதாண்டுகளுக்கு முன்பு “மாற்றியமைக்கப்பட்ட தொடக்கக் கல்வி” என்கிற பெயரால் குழந்தைகளை குலத்தொழிலுக்கு விரட்டும் திட்டம் ராஜாஜியால் கொண்டுவரப்பட்டதென்றால் இப்போதைய ஒன்றிய அரசு 18 வயது நிரம்பியவர்களை குலத்தொழிலுக்கு விரட்டுவதற்கு “விஸ்வகர்மா யோஜனா” என்கிற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 18 வகையான குலத்தொழில்களைச் செய்யும் குடும்பங்களிலிருந்து படித்து உயர்கல்விக்குச் செல்வதற்கு தகுதி படைத்தவர்களை படிக்க அனுப்பாமல், பயிற்சியும் கடனும் கொடுத்து அவர்களது குலத்தொழிலுக்கு திருப்பியனுப்புகிற இந்தத் திட்டம், சாராம்சத்தில் சாதியப் படிநிலைகளுக்கேற்பவே தொழில்களையும் பணிகளையும் ஒதுக்கும் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டிற்கு இசைவானது. வர்ணாஸ்ரமக் கோட்பாட்டினை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தால் பெண்களும் அடித்தட்டு மக்களும் நவீன வாழ்க்கைமுறையை நோக்கி அடைந்துவரும் முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளும் இந்தக் கொடுந்திட்டத்தை ஒன்றிய கைவிட வேண்டும் என்று தமுஎகச கோருகிறது. 

3. பல்வேறு தருணங்களில் கண்டனத்திற்குள்ளான போதும்  எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் முடிவுக்கு வந்தபாடில்லை. சமீபத்தில், மும்பை ஐஐடியில் பொதுவாக உள்ள உணவகப்பகுதியில் “தாவர உணவு” உண்போர் மட்டுமே அமர்வதற்கென தனியாக மேசைகள் ஒதுக்கப்பட்டு அவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாதென தடுக்கப்பட்டுள்ளனர். “இறைச்சி உணவு” உண்போர் மீதான இந்தத் தீண்டாமையை கடைபிடிப்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டத்தொகை விதித்துள்ள மும்பை ஐஐடி நிர்வாகத்தின் போக்கினை தமுஎகச கண்டிக்கிறது. மேலும், உணவகத்தில் நிலவும் தீண்டாமைக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோருகிறது.

4. மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்குகளை கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கிட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.   

வாழ்த்துகளுடன், 

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

19 Sept 2023

நூற்றாண்டு காணும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களைப் போற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

தமுஎகச வரவேற்பு
 

19.09.2023
 

“தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து” என்று தமிழ்ச்சமூகத்திற்கு தன்னை ஒப்பளித்த கவிஞர் தமிழ்ஒளி 1924 செப்டம்பர் 21 அன்று பிறந்தவர். நாளை மறுதினம் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. பாரதி, பாரதிதாசன், பெரியார், ஜீவா ஆகியோரின் கருத்தியல்களால் ஈர்க்கப்பட்டு கலை இலக்கியத்தளத்திலும் அரசியலிலும் தீவிரமாக பங்காற்றியவர் கவிஞர் தமிழ் ஒளி. விடுதலைக்கு முந்தைய காலனிய இந்தியாவிலும் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவிலும் வாழ்ந்த தமிழ்ஒளி தம் காலத்தின் அடித்தட்டு மக்களது வாழ்வியல் அவலங்களையும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான அவர்களது எத்தனங்களையும் தனது இலக்கிய ஆக்கங்களில் முதன்மைப்படுத்தினார். சிறுகதை, குறுநாவல், நாடகம், காவியம், திரையிசைப் பாடல் என பன்முகப்பட்ட வடிவங்களிலும் இயங்கிய தமிழ்ஒளியின் படைப்புலகம் சாதியத்திற்கும் அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் எதிரானது. குழந்தைகளுக்காக  அவர் எழுதிய கதைகளும் பாடல்களும் இயற்கையை, மனித உழைப்பை, சமத்துவத்தை, அறவொழுக்கத்தை, அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டாடக்கூடியவை. மே தினத்தையும் சீனப்புரட்சியையும் வரவேற்று அவர் எழுதிய கவிதைகளும் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் வெளிவந்த முன்னணி என்ற இதழில் வெளியான அவரது எழுத்துகளும் உழைப்பாளி மக்களால் என்றென்றும் போற்றத்தக்கவை. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானபோது அவ்வமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் தமிழ்ஒளி. 
 
“தூக்குக்கயிற்றினைத் தொட்டிழுத்தாலும் துளியும் அஞ்சாதே! ஒளியிலா நாட்டில் ஒளியினைப் பாய்ச்சு” என்று அநீதிகளுக்கெதிராக போராடத் தூண்டிய தமிழ்ஒளியை தனது ஐம்பெரும் ஆளுமைகளில் ஒருவராக ஏற்றுக்கொண்டுள்ள தமுஎகச, தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவினை நூறு இடங்களில் நடத்துகிறது. கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவும் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்துவருகிறது. இதன் தொடர்ச்சியில்தான் தமிழ் ஒளியின் நூற்றாண்டை அரசு விழாவாக நடத்தவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. இப்போது தமிழ்நாடு அரசு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ஒளியின் மார்பளவு சிலையினை அமைக்க முன்வந்துள்ளது. மேலும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50 இலட்சம் வைப்புத்தொகையாக வைக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்ச்சமூகத்திற்கு கலை இலக்கியம் வழியே மதிப்பார்ந்த பங்களிப்பினைச் செய்துள்ள கவிஞர் தமிழ் ஒளி அவர்களைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இவ்வறிவிப்பினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது.
 
அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்          
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்