8 Apr 2024

இப்போதில்லாவிட்டால்…

தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் வேண்டுகோள்


    நாட்டின் விடுதலைக்காகத் தீரமுடன் போராடிய மக்களின் விருப்பார்வங்களிலிருந்து உருவான நமது அரசியல் சட்டத்தை ஒழித்துக்கட்ட, அன்னியராட்சிக்கு சேவகம் செய்து வந்தவர்களின் கூட்டுமுகமான பாஜக ஆட்சி தொடர்ந்து முயற்சித்துவருகிறது. அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கு ஒத்திசைவாகவும் சுதந்திரமாகவும் இயங்கவேண்டிய நாடாளுமன்றம்/ சட்டமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பாஜகவின் குறுகிய மதவாதத்திற்கும் கார்ப்பரேட் சுரண்டலுக்கும் கீழ்ப்படியும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டுள்ளன. 

    கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது மனித சுபாவம். எனவேதான் நமது அரசியல் சாசனம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அனைவருக்குமே உரிமையாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றமும்கூட கருத்துரிமையையும் விமர்சிக்கும் உரிமையையும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு கருத்தை வெளிப்படுத்திவிட்டு சுதந்திரமாக இருந்து விடவே முடியாது என்கிறது ஒன்றிய பாஜக ஆட்சி. மனிதநிலையிலிருந்து நம்மைத் தாழ்த்தும் இந்தக் கொடுங்கோல் ஆட்சியை இப்போது வீழ்த்தாவிட்டால் இனி தேர்தல் என்பதே பழங்கதையாகிப்போகும்.

    தமது முற்போக்கான கருத்துகளுக்காக சமூகத்தின் நன்மதிப்பினைப் பெற்றிருந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற சிந்தனையாளர்கள் அவர்களது கருத்துகளுக்காகவே சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள்.

    ஒன்றிய பாஜக அரசு, தனது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள்மீது விமர்சனமும் மாற்றுக்கருத்தும் கொண்டுள்ள ஆளுமைகள் பலரையும் பீமாகோரேகான் பொய்வழக்கில் சிக்கவைத்து ஆண்டுக்கணக்கில் சிறைவைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பெறத் துணைநின்ற ஸ்டேன்ஸ் சுவாமிக்கு கைதிக்குரிய உரிமைகளை மறுத்துச் சிறையிலேயே சாகடித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவியது. உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள்  மீது உபா போன்ற கொடிய சட்டங்களைப் பாய்ச்சுகிறது. எஞ்சியுள்ள மக்களும்கூட நாட்டைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாக உணருமளவுக்கு அரசின் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் மூர்க்கமடைந்து வருகின்றன. அச்சமற்று வாழ்வதற்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் தடையாக உள்ள எதையும் எதிர்க்கிற இயல்புணர்விலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை  மேற்கொள்வதாக இந்தக் கூட்டறிக்கை அறிவிக்கிறது.  

**

        வாக்குரிமையின் மூலம் மக்கள் வழங்கியத் தீர்ப்புகளைத் திருடுகிறது  பாஜக. தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற லஞ்சப்பணத்தை வாரி இறைத்து இதுவரை 182 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஒன்பது மாநில அரசுகளைக் கவிழ்த்து தனது ஆட்சியை அமைத்திருக்கிறது. தேர்தல் களத்தை சமமற்றதாக்கும் விதமாக எதிர்க்கட்சிகளின் வங்கிக்கணக்கை முடக்குவது, அரசின் பல அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களைச் சிறையிலடைப்பது என நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சிதைத்துவருகிறது பாஜக.

**

        உணவு, உடை, மொழி, சமயம், தெய்வம், வழிபாட்டு முறை, நம்பிக்கை, கொண்டாட்டம், சடங்கு என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தனித்துவம் கொண்ட மக்கள் சமுதாயங்கள் இணங்கிவாழும் பேறுபெற்றது நம்நாடு. ஒளிரும் வானவில்லைப் போன்ற இந்தப் பன்மைத்துவம்தான் நம் நாட்டின் அழகு, வலிமை. அதனாலேயே விடுதலைப் போராட்டம் கட்டமைத்த மக்கள் ஒற்றுமைதான் இந்திய வளங்களிலேயே மிகவும் செறிவானதெனப் போற்றப்படுகிறது. ஆனால் இந்தப் பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் அடித்து நொறுக்கித் தட்டையாக்கி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே கடவுள், ஒரே தேர்தல் எனும் ஒரே..ஒரே முழக்கங்களோடு ஒருநபர் வல்லாதிக்கத்தை நோக்கி நாட்டை  நகர்த்துகிறது பாஜக. 

**

    சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பாஜகவின் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனியச்செய்துள்ளன. அகண்ட பாரதம் என்னும் அதன் முழக்கம் இறையாண்மையுள்ள அண்டைநாடுகளைச் சீண்டுவதாக உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம், பட்டினியற்ற நிலை, கருத்துரிமை, ஊடகச் சுதந்திரம்,  பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உலகளாவிய அளவில் இந்தியா பலபடிகள் பின்தங்கியிருப்பதற்கு பாஜக ஆட்சியே காரணம்.

    கொரானா பேரிடரை அறிவியலுக்குப் புறம்பான வகையில் கையாண்டதுடன் அதையும் தனது இஸ்லாமிய வெறுப்பரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டது பாஜக ஆட்சி. பொது முடக்கக் காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்ட அது,        

    புலம்பெயர்த் தொழிலாளர்களை நிர்க்கதியாக்கி விரட்டியது. தமது நலன்களுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை பகைநாட்டுப் படையினர் போல சித்தரித்து தாக்குதல் நடத்தி பலரை கொன்றது.    

    உலகம் இதுவரை கண்டிராதபடி 7.5 இலட்சம் கோடி ரூபாயளவுக்கு நிதி முறைகேடுகளைச் செய்துள்ளது  பாஜக ஆட்சி. அது தேர்தல் பத்திரம் மூலம் செய்துள்ள டிஜிட்டல் வழிப்பறியைப் பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது.

    பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம் சமகாலத்திற்குரியதாக இருக்கவில்லை. அங்கு பெண்கள், தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினரது சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், வீடுகளை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குதல், அவர்களது வாழ்வாதாரங்களை முடக்குதல், அவர்கள் மீது வெறுப்பினைப் பரப்புதல் ஆகிய கொடூரங்கள் தீவிரமடைந்துள்ளன. மதப்பகைமையை உண்டாக்கி மக்களைப் பிளவுபடுத்திச் சமூகத்தை எப்போதுமே பதற்றத்தில் வைத்திருக்கும் பாஜக, தமிழ்நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் எவ்வகையிலும் ஏற்புடைய கட்சியல்ல. ஆனாலும் அந்தக் கட்சி அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு மறைமுகமாக நிழலாட்சி நடத்தி தமிழ்நாட்டின் நலன்களைக் காவுவாங்கியது.

**

    தமிழர் பண்பாட்டின் தொன்மையை எடுத்தியம்பும் கீழடி அகழ்வாய்வைப் பாதியில் நிறுத்தியது, ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுத்தது, பிறப்பால் எவ்வுயிரும் சமம் என முழங்கிய திருவள்ளுவர், அய்யா வைகுண்டர், சன்மார்க்கர் வள்ளலார் ஆகிய பேராளுமைகளை சாதிய, சனாதனவாதிகளாகச் சிறுமைப்படுத்துவது,  தமிழுக்குப் பெருமை சேர்த்த ராபர்ட் கால்டுவெல்லை இழிவுபடுத்துவது, நீட் விலக்கிற்கு ஒப்புதல் வழங்க மறுப்பது, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க மறுப்பது, பேரிடர்க்கால நிவாரணத்தொகையை வழங்க மறுத்தது என தமிழ் தமிழர் தமிழ்நாடு விரோதப்போக்குடன் செயல்படும் பாஜகவை இந்தக்காலம் முழுவதும் அதிமுகவும் பாமகவும் ஆதரித்து வந்துள்ளன. இஸ்லாமியரைத் தனிமைப்படுத்தும் நோக்குடன் திணிக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டம் அதிமுக பாமக ஆதரவினால் தான் நிறைவேறியது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் எதிராளிகளாகக் காட்டிக்கொண்டு இருவேறு கூட்டணிகளாக போட்டியிட்டாலும் இரண்டையும் நிராகரிப்பதே தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததாகும்.

    இந்தியாவின் வரலாற்றை இந்தியத்தன்மையுடன் எழுதப்போவதாகச் சொல்லிக்கொண்டு அதற்குகந்த குழுவினை அமைத்துள்ளது பாஜக ஆட்சி. திராவிடர்களின் சிந்துவெளிப் பண்பாட்டை ஆரியப் பண்பாடாகவும், ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகளாகவும், தமிழ் உள்ளிட்ட இந்தியமொழிகள் அனைத்திற்கும் மூலமொழி சமஸ்கிருதமே என்றும் ஒரு கட்டுக்கதையை வரலாறு என்று திரிப்பதே இக்குழுவின் பணி. பாஜகவின் இந்த வரலாற்று மோசடிக்கு எதிரான தீர்ப்பினை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கி, சிந்துவெளிப் பண்பாட்டை ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்ததன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைத் தொடங்குவோம்.

**

    மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமையையும் பன்மைத்துவத்தையும் தனித்துவத்தையும் காப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இந்தியா கூட்டணியை ஆதரிப்பது எழுத்தாளர்கள் கலைஞர்களின் சமூகப்பொறுப்பு எனக் கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களும் அவ்வாறே இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.


எஸ்.வி. ராஜதுரை

அ. மார்க்ஸ்

வே.மு. பொதியவெற்பன்

பாமா

கவிஞர் இந்திரன்

க. பஞ்சாங்கம்

பெருமாள் முருகன்

பசு கவுதமன்

அரிமளம் சு. பத்மநாபன்

சமயவேல்

அ.ராமசாமி

மனுஷ்யபுத்திரன்

இமையம்

அறம்

கலாப்ரியா

சக்தி ஜோதி

சூர்யா சேவியர்

ஆழி செந்தில்நாதன்

நா. முருகேச பாண்டியன்

இரா. எட்வின்

கமலாலயன்

நீதிமணி

நக்கீரன்

யுக பாரதி

இரா. முருகவேள்

அ.முத்துக்கிருஷ்ணன்

மீரான் மைதீன்

யவனிகா ஸ்ரீராம்

கீரனூர் ஜாகீர் ராஜா

கவின்மலர்

விஜய் ஆனந்த்

சம்சுதீன் ஹீரா

அ. பாக்கியம் சங்கர்

அ. ஜெகநாதன்

எம்.எம். தீன்

சுதீர் செந்தில்

மதிக்கண்ணன்

சுகுணா திவாகர்

கவிதா பாரதி

தமிழ்மகன்

விஷ்ணுபுரம் சரவணன்

புலியூர் முருகேசன்

பழநி ஷஹான்  

அரி சங்கர்

யெஸ். பாலபாரதி

காமாட்சி

சக்தி சூர்யா

ந. இளங்கோ

சிலம்பு செல்வராஜ்

இ.பா. சிந்தன்

முகம்மது யூசுப்

ஷக்தி

நிவேதிதா லூயிஸ்

மதுக்கூர் ராம­லிங்கம்

ஆதவன் தீட்சண்யா

அருணன்

ச.தமிழ்ச்செல்வன்

சிகரம் செந்தில்நாதன்

சைதை ஜெ

நந்தலாலா

உதயசங்கர்

இலட்சுமிகாந்தன்

நாறும்பூநாதன்

எஸ்.ஏ. பெருமாள்

பக்தவச்சலபாரதி

சு.பொ. அகத்தியலிங்கம்

மயிலை பாலு

பிரளயன்

எம். சிவக்குமார்

வெண்புறா சரவணன்

கா. பிரகதீஸ்வரன்

ரோஹிணி

நவகவி

ஜீவி

தேனிசீருடையான்

ஸ்ரீரசா

முத்துநிலவன்

சுந்தரவள்ளி

அ.உமர்பாரூக்

ம.காமுத்துரை

ஜா.மாதவராஜ்

மலர்விழி

அய். தமிழ்மணி

ஆர். நீலா

ஏகாதசி

அ.கரீம்

எஸ்.இலட்சுமணப்பெருமாள்

ஜனநேசன்

கரிசல் குயில் கிருஷ்ணசாமி

இரா.தெ.முத்து

கிருஷி

எஸ்.காமராஜ்

கோவை சதாசிவம்

இரா. தனிக்கொடி

மு.முருகேஷ்

தக்கலை ஹலீமா

நிறைமதி

அ. பகத்சிங்

இக்பால்

சோழ நாகராஜன்

மதுரை நம்பி

அல்லி உதயன்

மு. ஆனந்தன்

நா.வே. அருள்

சிராஜுதீன்

அருள் செல்வி

முரசு ஆனந்த்

இளங்கோ கார்மேகம்

ஜீவபாரதி

கரன் கார்க்கி

ச.மதுசுதன்

செந்தில்

ராஜமாணிக்கம்

ராஜசங்கீதன்

ராஜிலா ரிஸ்வான்

நேசமித்திரன்

பெ.ரவீந்திரன்

எஸ். சண்முகம்

சிந்து ஜா

அமர்நாத்

தவில் விநாயகம்

ச. ப்ரியா

தங்கமுருகேசன்

ஜின்

பூபாளன்

அரவிந்த் ரவிச்சந்திரன்

லி.பா. சாரதி

ராசி.பன்னீர்செல்வம்

கவிஞர் கதிரை

ஜீவசிந்தன்

வல்லம் தாஜுபால்

ஓவியர் சரண்ராஜ்

ஓவியர் உமாபதி

பா. மகாலட்சுமி

முனைவர் இராச. கலைவாணி

நீலமேகம்

கவிஞர் ராசாராமன்

இளம் கவிஞர் சத்தியபிரியன்

பாடகர் உத்தமன்

வைகறை மஞ்சுளா

ரத்தின விஜயன்

சசி ரேகா

சரவணகாந்த்


22 Mar 2024

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதா? - தமுஎகச கண்டனம்

தனது இசைப்புலமைக்காகவும் துணிச்சலான எழுத்துக்காகவும் சமூகச் செயல்பாடுகளுக்காகவும் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றுள்ள கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சென்னை மியூசிக் அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்குரியவர் என்ற வகையில் 2024 டிசம்பர் இறுதியில் நடைபெறவுள்ள மியூசிக் அகாடமியின் 98ஆம் ஆண்டு இசை நிகழ்வுகளுக்கு கிருஷ்ணா தலைமை வகிப்பார். இம்முடிவினை எதிர்த்தும், கிருஷ்ணா தலைமை வகிக்கும் நிகழ்வில் பங்கேற்கமுடியாது என்றும் கர்நாடக இசைச் சகோதரிகள் எனப்படும் ரஞ்சனி – காயத்ரி ஆகியோர் தமது சமூக ஊடகப்பக்கத்தில் எழுதியுள்ள பதிவின் சொல்லும் பொருளும் கடும் கண்டனத்திற்குரியவை.



பார்ப்பனர்களை இனஅழிப்பு செய்யும்படி வெளிப்படையாகத் தூண்டிய, பார்ப்பனப் பெண்களை இழிவுபடுத்திய, பார்ப்பனர் மீதான வெறுப்புணர்வை இயல்புணர்வாக மாற்றிய பெரியாரைப் புகழ்ந்து பாடிவரும்  இந்த கிருஷ்ணாவுடன் (பெருமாள் முருகன் எழுதிய “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடல்) தங்களால் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று பொருமியுள்ளனர். பெரியார் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பலமுறை நிரூபிக்கப்பட்ட பின்னும்கூட அதே பொய்களை முன்வைத்து அவதூறு செய்துள்ளனர். 

அகில இந்திய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் அண்ணாமலையும் தங்களுக்குப் பிடித்த தலைவர்கள் என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிடும் இச்சகோதரிகளால் கிளப்பிவிடப்பட்ட “கிருஷ்ணா எதிர்ப்பு” விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர், கிருஷ்ணமோகன் – ராம்குமார் மோகன் சகோதரர்கள் ஆகிய கலைஞர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. அவர்களும் கிருஷ்ணா தலைமையிலான விழாவில் பங்கேற்றால் தங்களது கெளரவத்துக்கு இழுக்கு இசைக்குத் தீட்டு என்கிற அளவுக்கு சகிப்பின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். சித்ரவீணை ரவிக்கிரண் என்பவர் என்னும் ஒருபடி மேலேபோய் ஏற்கனவே தனக்கு மியூசிக் அகாதமி வழங்கியிருந்த சங்கீத கலாநிதி விருதினை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.  
 
கர்நாடக இசையுலகில் நிலவும் பார்ப்பனராதிக்கம், பாலினப் பாகுபாடு, மதச்சாய்மானம், மேட்டிமைத்தனம், பழமைவாதம் ஆகியவற்றை கண்டித்தும், கர்நாடக இசையை ஜனநாயகப்படுத்தவும் எல்லா இசைமரபுகளுடனும் வகைமைகளுடனும் இணக்கம் பேணவும் கிருஷ்ணா சுதந்திரமாக பாடியும் எழுதியும் இயங்கியும் வருவது குறித்த ஒவ்வாமை மற்றும் வெறுப்பிலிருந்து  நொதித்துவருகிறது இந்த எதிர்ப்பு. மாற்றுக்கருத்தாளர்களை ஒதுக்கும் இந்த மனோபாவத்தைக் கண்டித்து, எல்லா கருத்தோட்டங்களையும் உள்ளடக்கியதான  கலைச்செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் குரலெழுப்ப வேண்டுமென தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 
 
தோழமையுடன்
 மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர்
 
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

 21.03.2024

1 Feb 2024

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2023

01.02.2024

2023ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2023ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் மூன்று பிரதிகள் 2024 பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்) 
மதுரை- 625001  தொலைபேசி: 0452-2341669 


குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தனிநபர் இணைய இணைப்புகளை 73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும். 

தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் விருதுத்தொகை ரூ.10,000/,  சான்றிதழ்  ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும். 

விருதுகள்

1. தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல் 

2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது: நாவல் 

3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு 

4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: அல்புனைவு  (நான் ஃபிக்‌ஷன்) நூல் 

5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு 

6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு 
7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு 

8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது:
 குழந்தைகள் இலக்கிய நூல்  

9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் 

10. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் 

11. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்


பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:   

12. மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி  விருது: 
நாட்டுப்புறக் கலைச்சுடர்

13. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்

14. த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்

15. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை

வாழ்த்துகளுடன்,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

15 Nov 2023

தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு தமுஎகச புகழஞ்சலி

விடுதலைப்போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி செம்மலர் இலக்கிய ஏட்டினைத் தொடங்குவதற்கு உந்துசக்தியாக இருந்தவர்களுள் தோழர் சங்கரய்யாவும் ஒருவர். செம்மலரில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் 34பேர் 1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23,24 தேதிகளில் மதுரையில் கூடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தனர். இந்தக் கூட்டத்தில், தமிழக பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.நல்லசிவன், கே.முத்தையா ஆகியோரோடு தோழர் என்.சங்கரய்யாவும் பங்கேற்று முற்போக்கு எழுத்தாளர்களுக்கு என்ற ஓர் அமைப்பினை உருவாக்கவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தார். 1975ஆம் ஆண்டு ஜூலை 12, 13 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற தமுஎச முதல் மாநாட்டில் பங்கேற்று தோழர் சங்கரய்யா வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், “கடந்த காலத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் அழிந்ததுபோல், இது அழிந்துவிடக்கூடாது என்றார்கள். இது அப்படி அழியாது. ஏனென்றால், இதற்கு தெளிவான கொள்கை அடிப்படை உண்டு” என்று முழங்கினார். முதல் மாநாட்டில் அவர் கூறியதுபோல, தமுஎகச தமிழகத்தின் மிகப்பெரும் கலை, இலக்கிய பண்பாட்டு அமைப்பாக உயர்ந்தோங்கி வளர்ந்து நிற்பது கண்டு அவர் பேருவகை கொண்டார்.
தமுஎகச நடத்திய பல்வேறு மாநில மாநாடுகளிலும், பயிலரங்குகளிலும் பங்கேற்று அவர் ஆற்றிய உரை தமுஎகச வளர்ச்சிக்குத் தடம் வகுத்து கொடுத்தது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற தமுஎகசவின் 15-வது மாநில மாநாட்டின் போது நாட்டு விடுதலையின் பவள விழாவையும் இணைத்துக் கொண்டாடினோம். இந்த மாநாட்டில், ஆக.14 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாநாட்டில் ஏற்றப்படும் தேசியக்கொடியை தோழர் சங்கரய்யா எடுத்துக் கொடுத்தார். அவரால் எடுத்தளிக்கப்பட்ட அந்தக் கொடியே தமிழகம் முழுவதும் பயணித்து மாநாட்டில் ஏற்றப்பட்டது. இவ்வாறாக தமுஎகசவின் அனைத்து நிகழ்வுகளிலும் தம்மை அவர் நெருக்கமாக பிணைத்துக் கொண்டிருந்தார். 
 
சங்ககால இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருந்த அவர், முற்போக்கு படைப்பாளர்களின் படைப்புகளை உடனுக்குடன் படித்து அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார். தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான அவர், தன்னுடைய உரைகள் அனைத்திலும் நம்பிக்கை விதைகளை விதைத்து வந்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட உருவாக்கத்தின் போது அவர் நிகழ்த்திய உரைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. 
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கித் தந்த ஆதி விதைகளில் ஒருவரான தோழர் சங்கரய்யாவுக்கு அமைப்பின் விழுதுகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றன. சமநீதி, சமூக நீதி, படைப்பதற்கான பயணத்தில் தோழர் சங்கரய்யாவின் குரல் என்றென்றும் நம்மை வழிநடத்தும். தோழர் சங்கரய்யாவுக்கு வீரவணக்கம்.


தோழமையுடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்  ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்.
15.11.2023

10 Oct 2023

தமுஎகச மாநிலச்செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்


2023 அக்டோபர் 7 அன்று தேனியில் மாநிலத்தலைவர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற தமுஎகச மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 

1. ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்று பீற்றிக்கொண்டே ஜனநாயகத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றான ஊடகங்களை ஒடுக்கிவருவது தொடர்பாக மோடி அரசு உலகளாவிய கண்டனங்களைப் பெற்றுவருகிறது. ஆனாலும் அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பறிப்பதில் ஒன்றிய அரசு மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது. ஒன்றிய அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது மாற்றுக்கருத்தினை வெளிப்படுத்துகிற, கூர்மையாக விமர்சிக்கிற ஆளுமைகள் மீதும் ஊடகங்கள் மீதும் அமைப்புகள் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஒடுக்கும் இழிநிலை தொடர்கிறது. இதன் தொடர்ச்சியில் நியூஸ் க்ளிக் இணைய இதழை முடக்குவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு தமுஎகச தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துகொள்கிறது. கைது செய்யப்பட்டுள்ள நியூஸ் க்ளிக் ஆசிரியரை உடனே விடுவிப்பதற்கும், இதழை மீண்டும் சுதந்திரமாக  வெளியிடும் சூழலை உருவாக்குவதற்கும் குரலெழுப்புமாறு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 

2. எழுபதாண்டுகளுக்கு முன்பு “மாற்றியமைக்கப்பட்ட தொடக்கக் கல்வி” என்கிற பெயரால் குழந்தைகளை குலத்தொழிலுக்கு விரட்டும் திட்டம் ராஜாஜியால் கொண்டுவரப்பட்டதென்றால் இப்போதைய ஒன்றிய அரசு 18 வயது நிரம்பியவர்களை குலத்தொழிலுக்கு விரட்டுவதற்கு “விஸ்வகர்மா யோஜனா” என்கிற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 18 வகையான குலத்தொழில்களைச் செய்யும் குடும்பங்களிலிருந்து படித்து உயர்கல்விக்குச் செல்வதற்கு தகுதி படைத்தவர்களை படிக்க அனுப்பாமல், பயிற்சியும் கடனும் கொடுத்து அவர்களது குலத்தொழிலுக்கு திருப்பியனுப்புகிற இந்தத் திட்டம், சாராம்சத்தில் சாதியப் படிநிலைகளுக்கேற்பவே தொழில்களையும் பணிகளையும் ஒதுக்கும் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டிற்கு இசைவானது. வர்ணாஸ்ரமக் கோட்பாட்டினை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தால் பெண்களும் அடித்தட்டு மக்களும் நவீன வாழ்க்கைமுறையை நோக்கி அடைந்துவரும் முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளும் இந்தக் கொடுந்திட்டத்தை ஒன்றிய கைவிட வேண்டும் என்று தமுஎகச கோருகிறது. 

3. பல்வேறு தருணங்களில் கண்டனத்திற்குள்ளான போதும்  எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் முடிவுக்கு வந்தபாடில்லை. சமீபத்தில், மும்பை ஐஐடியில் பொதுவாக உள்ள உணவகப்பகுதியில் “தாவர உணவு” உண்போர் மட்டுமே அமர்வதற்கென தனியாக மேசைகள் ஒதுக்கப்பட்டு அவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாதென தடுக்கப்பட்டுள்ளனர். “இறைச்சி உணவு” உண்போர் மீதான இந்தத் தீண்டாமையை கடைபிடிப்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டத்தொகை விதித்துள்ள மும்பை ஐஐடி நிர்வாகத்தின் போக்கினை தமுஎகச கண்டிக்கிறது. மேலும், உணவகத்தில் நிலவும் தீண்டாமைக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோருகிறது.

4. மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்குகளை கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கிட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.   

வாழ்த்துகளுடன், 

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

19 Sept 2023

நூற்றாண்டு காணும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களைப் போற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

தமுஎகச வரவேற்பு
 

19.09.2023
 

“தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து” என்று தமிழ்ச்சமூகத்திற்கு தன்னை ஒப்பளித்த கவிஞர் தமிழ்ஒளி 1924 செப்டம்பர் 21 அன்று பிறந்தவர். நாளை மறுதினம் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. பாரதி, பாரதிதாசன், பெரியார், ஜீவா ஆகியோரின் கருத்தியல்களால் ஈர்க்கப்பட்டு கலை இலக்கியத்தளத்திலும் அரசியலிலும் தீவிரமாக பங்காற்றியவர் கவிஞர் தமிழ் ஒளி. விடுதலைக்கு முந்தைய காலனிய இந்தியாவிலும் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவிலும் வாழ்ந்த தமிழ்ஒளி தம் காலத்தின் அடித்தட்டு மக்களது வாழ்வியல் அவலங்களையும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான அவர்களது எத்தனங்களையும் தனது இலக்கிய ஆக்கங்களில் முதன்மைப்படுத்தினார். சிறுகதை, குறுநாவல், நாடகம், காவியம், திரையிசைப் பாடல் என பன்முகப்பட்ட வடிவங்களிலும் இயங்கிய தமிழ்ஒளியின் படைப்புலகம் சாதியத்திற்கும் அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் எதிரானது. குழந்தைகளுக்காக  அவர் எழுதிய கதைகளும் பாடல்களும் இயற்கையை, மனித உழைப்பை, சமத்துவத்தை, அறவொழுக்கத்தை, அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டாடக்கூடியவை. மே தினத்தையும் சீனப்புரட்சியையும் வரவேற்று அவர் எழுதிய கவிதைகளும் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் வெளிவந்த முன்னணி என்ற இதழில் வெளியான அவரது எழுத்துகளும் உழைப்பாளி மக்களால் என்றென்றும் போற்றத்தக்கவை. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானபோது அவ்வமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் தமிழ்ஒளி. 
 
“தூக்குக்கயிற்றினைத் தொட்டிழுத்தாலும் துளியும் அஞ்சாதே! ஒளியிலா நாட்டில் ஒளியினைப் பாய்ச்சு” என்று அநீதிகளுக்கெதிராக போராடத் தூண்டிய தமிழ்ஒளியை தனது ஐம்பெரும் ஆளுமைகளில் ஒருவராக ஏற்றுக்கொண்டுள்ள தமுஎகச, தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவினை நூறு இடங்களில் நடத்துகிறது. கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவும் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்துவருகிறது. இதன் தொடர்ச்சியில்தான் தமிழ் ஒளியின் நூற்றாண்டை அரசு விழாவாக நடத்தவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. இப்போது தமிழ்நாடு அரசு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ஒளியின் மார்பளவு சிலையினை அமைக்க முன்வந்துள்ளது. மேலும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50 இலட்சம் வைப்புத்தொகையாக வைக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்ச்சமூகத்திற்கு கலை இலக்கியம் வழியே மதிப்பார்ந்த பங்களிப்பினைச் செய்துள்ள கவிஞர் தமிழ் ஒளி அவர்களைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இவ்வறிவிப்பினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது.
 
அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்          
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்
   

4 Sept 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையைத் திரிக்கும் மோசடி

தமுஎகச கண்டனம்
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2023 செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையைத் திரித்து அவர் மீது அவதூறு பரப்புவோருக்கு தமுஎகச தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. 
 
உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை உள்ளிட்டு மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் காணொலியாக சமூக ஊடகங்களில் காணக்கிடைக்கிறது. அவற்றை காணும் எவரொருவரும் இந்த மாநாட்டின் எந்தவொரு நிகழ்வும், யாருடைய உரையும் குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிராக அல்லாமல், பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தி ஒடுக்கிவருகிற சனாதனக் கருத்தியலை ஒழிக்கவேண்டும் என்றே அமைந்திருக்கிறது என்பதை உணரமுடியும். 
 
மாநாட்டில், ஆன்மீகப்பற்றுடைய அய்யா சத்தியவேல் முருகனார், இறை நம்பிக்கைக்கும் சனாதனத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்று பேசியதுடன் சனாதனம் இழைத்த அநீதிகளை எடுத்துரைத்தார். கர்நாடத்தில் இயங்கிவரும் தேவதாசி ஒழிப்புச் சங்கத்தின் மாநிலச்செயலாளர் மாலம்மா, சிறுமிகள் தேவதாசிகளாக ஆக்கப்பட்டு பாலியல் சுரண்டலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுவதற்கு அடிப்படையாக உள்ள சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று கள அனுபவத்திலிருந்து ஆவேசமாக எடுத்துரைத்தார். இவர்கள் பேசியதற்கெல்லாம் பதில் சொல்ல இயலாத பாஜகவினர், சனாதனக் கருத்தியலை ஒழிக்கவேண்டும் என்று உதயநிதி பேசியதை “சனாதனத்தைப் பின்பற்றும் மக்களை ஒழிக்கவேண்டும்” என்று அவர் பேசியதாக திரித்து அரசியல் ஆதாயத்திற்காக மோசடிப்பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்த மோசடியையே ஆதாரமாக வைத்துக்கொண்டு டெல்லியிலும் பீஹாரிலும் அவர் மீது புகாரளித்துள்ளனர். அவர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கொக்கரிக்கின்றனர். இதற்கெல்லாம் பயந்து சனாதன ஒழிப்புப் பற்றி தான் தெரிவித்த கருத்தினை திரும்பப்பெறப் போவதில்லை என்று உறுதிபட அறிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது தமுஎகச. 
 
அலைபேசி மூலமாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் தனக்கு வரும் மிரட்டல்களைக் கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்று சனாதன ஒழிப்பில் தனக்குள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்திவரும் தமுஎகச மாநிலத் துணைத்தலைவரும் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவருமான திரைக்கலைஞர் ரோஹினி அவர்களுக்கும் பாராட்டுகள். 
 
சனாதன ஒழிப்பு என்று பேசத் தொடங்கியதற்கே சனாதனவாதிகளின் மனம் புண்பட்டுவிட்டது என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு, சனாதனத்தினால் தலைமுறை தலைமுறையாக அநீதிக்காளாகியிருக்கும் கோடானுகோடி மக்களின் குமுறலில் இருந்தே சனாதனம் ஒழிக என்கிற முழக்கம் உயிர்த்தெழுந்துள்ளது என்கிற உண்மையை உணர்த்தும் பணியை தமுஎகச தொடர்ந்து மேற்கொள்ளும். 
 
தோழமையுடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

04.09.2023

சனாதன ஒழிப்பு மாநாடு - தீர்மானங்கள்

சனாதன ஒழிப்பு மாநாடு


2023 செப்டம்பர் 2, காமராசர் அரங்கம், சென்னை


தீர்மானங்கள்


1. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டை தொகுத்தெழுதிய மநுவின் சிலை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வாய வளாகத்தில் 1989ஆம் ஆண்டு முதல் இருப்பது அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு விரோதமானது. எனவே அதை உடனடியாக அகற்ற வேண்டும்.

2. அரசியல் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இயங்க வேண்டியவையே அரசு அலுவலகங்கள். எனவே அனைத்துவழிகளிலும் மதச்சார்பின்மையைக் கடைபிடிப்பது அவசியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுகுறித்து தெளிவான அரசாணைகள் இருந்தும் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, பூமி பூசை, புதிய கட்டிடத் திறப்புக்கு புண்ணியார்த்தனம், யாகங்கள், வார இறுதிப் பூசை, விநாயகர் சதுர்த்தி போன்ற ஒரு மதத்தின் சார்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இப்படியான பூசைகள் மூலம் பார்ப்பனியச் சடங்குகளின் பிடியில் அரசு அலுவலகங்கள் சிக்குண்டு கிடக்கின்றன. பெரும்பான்மையாக உள்ளவர்களின் மத நடவடிக்கைகள் இயல்பானவை என்கிற நிலையை உருவாக்குவது அரசியல் சட்டம் உயர்த்திப்பிடிக்கும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. எனவே இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும்.

3. அரசு அலுவலக வளாகங்களுக்குள் எந்தவொரு குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டிடத்தையும் அரசு அலுவலகம் நிர்வாகிக்கக் கூடாது. புதியதாக எந்தவொரு வழிப்பாட்டுத்தலம் அமைப்பதையும் அனுமதிக்கக்கூடாது.

4. இறை நம்பிக்கை, மத ஈடுபாடு என்பவை குடிமக்களின் தனிப்பட்ட விருப்பம். அரசைப் பொறுத்தவரை மதச்சார்பற்றது. எனவே, மதம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அமைச்சர்களோ அரசு அலுவலர்களோ ஊழியர்களோ அவர்களுடைய பணிசார்நிலையில் கலந்து கொள்ளக்கூடாது. அனைத்து மக்களுக்குமான இவர்கள் தமது சொந்த சாதி அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கெடுப்படுப்பதும் கூடாது.

5. வாழ்விடங்களும் வழிபாட்டிடங்களும் சாதி அடிப்படையில் பிரிந்திருப்பதைப் போலவே மயானங்களும் பிரிந்திருக்கின்றன. இந்தப் பிரிவினையின் காரணமாக சமரசம் உலாவும் இடம் எனச் சொல்லப்படும் மயானங்களிலேயே கடும் மோதல்கள் உருவாகின்றன. இந்நிலையைத் தவிர்க்க எல்லா ஊர்களிலும் பொது மயானம் அமைக்கப்பட வேண்டும். ஒரு ஊர் ஒரே சுடுகாடு/ இடுகாடு என்கிற நிலை எட்டப்பட வேண்டும். அதற்கான மன ஏற்பை வளர்க்க மக்களிடையே பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும்.

6. சனாதனத்தின் கோரவடிவமான சாதியம் நீடித்திருப்பதன் முதன்மைக் காரணியாக இருப்பது அகமணமுறையாகும். நாட்டில் சாதி கலப்புத் திருமணம் மிகக்குறைவாக நடக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது கவலையளிக்கக் கூடியதாகும். சாதிய அமைப்புகள் தம் சாதி இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் வேறு சாதியினரை திருமணாம் செய்துகொள்ளமாட்டேன் என்று கோவிலில் வைத்து வெற்றிலைச் சத்தியம் வாங்குவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வாழ்க்கைத்துணையை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுத்துவருகின்றன. சாதியாணவக்கொலைகள் மூலம் சாதி கலப்ப்பு/ மறுப்புத் திருமணத்தின் மீது அச்சம் உருவாக்கப்படுகிறது.

அகமண முறையை விட்டுவிடுதலையாகி வெளியேற விரும்புவோர் கைக்கொள்ளும் நடைமுறைதான் சாதிமறுப்புத் திருமணம். இதனைப் பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பது மட்டுமின்றி வாடகைக்கு வீடுதர மறுப்பது உட்பட பல வகையில் புறக்கணிக்கும் நிலை உள்ளது. திருமணப் பதிவிலும் ஏராளமான இடையூறுகள், கடுமைகள். இவையெல்லாம் சாதியத்தைக் கெட்டிப்படுத்துவற்கான திட்டங்களே.

எனவே, சாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொள்வோரின் அச்சம் அகற்றும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அரசே காதலர் புகலிடங்களை உருவாக்க வேண்டும். அவர்களை சாதி/சமய மறுப்பாளர் என அறிவித்து அவர்களின் குழந்தைகளுக்குக் கட்டாய, கட்டணமில்லா கல்வி வழங்கி வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

7. குடும்பங்களில் தான் அதிகமும் பார்ப்பனியச் சடங்குகள் நடக்கின்றன. குடும்பங்களில் உரையாடி இச்சடங்குகளை நிறுத்தினாலே பார்ப்பனியத்தின் உயிர்நாடியான சடங்குகள் அழிந்துவிடும்.

8. பார்ப்பனியச் சடங்குகளுக்கு மாற்றாக புதிய பண்பாட்டு வாழ்க்கை நெறிகளையும் கொண்டாட்டங்களையும் உருவாக்குவதற்கு தமிழர் பண்பாட்டில் தோய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.

9. பெயர் சூட்டும் விழா பொதுவாக பார்ப்பனச்சடங்குகளின்றியே நடைபெறுகிறது என்றாலும் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருத மயமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்ப்பெயர்களைச் சூட்ட வேண்டும்.

10. புதுமனை புகுவிழாக்களில் நடக்கும் கணபதி ஹோமம் என்ற பார்ப்பனச் சடங்கு வீட்டின் தீட்டைக் கழிக்கும் சடங்கு அனைத்து சாதியினரும் சேர்ந்து கட்டிய வீடு தீட்டுப்பட்டது என்று அந்த தீட்டை கழிக்கும் சடங்காகவே, புனிதப்படுத்தும் சடங்காகவே நடக்கிறது என்பதால் அந்த சடங்கைத் தவிர்த்து புதுமனை திறப்பு விழா என்று நடத்தலாம்.

11. பூப்புனித நீராட்டு விழா என்ற சடங்கினை நடத்த நடத்த வேண்டிய அவசியமே இல்லை. பெண்குழந்தைகள் பருவமடைவதை தீட்டாகப் பார்த்து தீட்டு கழிக்கும் இந்தப் பார்ப்பனியச் சடங்கினை கைவிட வேண்டும்.

12. இறப்புச் சடங்குகள் முழுக்கவும் இறப்பு என்கிற இயற்கை நிகழ்வை தீட்டு எனக் கருதி பார்ப்பனியச் சடங்கினால் புனிதப்படுத்தப்படுவதாக நடக்கின்றன. மரணம் தீட்டானதல்ல என்றும் உடல் தானம் செய்வதை ஊக்கப்படுத்தியும் பரப்புரை மேற்கொள்வதன் மூலம், இந்தச் சடங்குகளில் பெரும்பாலனவற்றை தவிர்க்க முடியும்.


29 Aug 2023

பொது நூலகத்துறையை விழுங்கும் மோசடிகள்!

-தமுஎகச கண்டனம்
 
தமிழறிஞர்கள் எழுதிய நூல்களை வேறொருவர் பெயரிலும், ஒரே நூலை வெவ்வேறு ஆசிரியர்/ பதிப்பகங்களின் பெயர்களிலும் வெளியிட்டு நூலக ஆணை பெற்றிருக்கும் மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது. நூலகத்துறையை பணமீட்டும் குறுக்கு வழியாக கருதும் சில பதிப்பாளர்கள் பொது நூலகத்துறையின் அதிகாரிகளை உடந்தையாக்கிக்கொண்டே இந்த மோசடியைச் செய்திருக்கமுடியும். கடைசி பத்தாண்டுகளில் பெருமளவில் நடந்துள்ளதாக தெரியவரும் இதுபோன்ற மோசடிகளால் நூலகங்கள் குப்பைக்கிடங்கின் நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளன. இதேநிலை தொடருமாயின், நூலகத்தின் மீதான நம்பகம் பாதிக்கப்படுவதுடன் வாசகர்களின் ஆர்வமும் குன்றிப்போகும் கெடுநிலை வரக்கூடும். நூலகத்துறையை உள்ளிருந்து அரித்துத் தின்னும் இந்தக் கரையான்களுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன், இவர்கள்மீது பொது நூலகத்துறையும் தமிழ்நாடு அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
 
நூலக ஆணைக்காக ஒதுக்கப்படும் நிதியை குறிப்பிட்ட  சில பதிப்பகங்கள் குறுக்கு வழியில் நூலக ஆணை பெற்று அபகரித்துவிடுகின்றன என்கிற குற்றச்சாட்டு நீடிக்கும் நிலையில் இப்போது இம்மாதிரியான புதுவகை மோசடியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொது நூலகத்துறை ஆண்டுதோறும் வெளியாகக் கூடிய புதிய நூல்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் பாரபட்சமற்றும் தெரிவுசெய்து நூலக ஆணை வழங்கவேண்டும் என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் எழுப்பிவரும் கோரிக்கையுடன் தமுஎகச ஒன்றுபடுகிறது.  
பொருளாதார நிலை, அணுகும் வாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களால் சொந்தமாக நூல்களை வாங்கிக்கொள்ள முடியாத மாணவர்கள், ஆய்வாளர்கள், படிப்பாளிகள் என பலரும் மேலதிகத் தேவைகளுக்காக நூலகங்களையே பெரிதும் சார்ந்துள்ளனர்.  இத்தேவையை நிறைவு செய்யும்விதமாக அரசு நூலகங்களும் தனியார் நூலகங்களும் பெரும்பங்காற்றும் தனித்துவத்தைக் கொண்ட தமிழ்நாட்டின் நூலகக் கட்டமைப்பினை ஊழலும் பாரபட்சமும் அற்றதாக வலுப்படுத்துவதற்கு பொது நூலகத்துறையும் தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமுஎகச வலியுறுத்துகிறது. 
 
தோழமையுடன்,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்  
 
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

29.08.2023
 

13 Jul 2023

பிளவுவாத அரசியலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!

பொது சிவில் சட்டம் பற்றி 12.07.2023 மாலை இணையவழியில் தமுஎகச மாநிலக்குழு நடத்திய தெளிவரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

பொது சிவில் சட்டத்திற்கான கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு பன்மைத்துவ இந்தியா எனும் தேன்கூட்டின் மீது கல்லெறிந்து மீண்டும் களேபரத்தைத் துவக்கியுள்ளது. அயோத்தியில் பாபர்மசூதியை இடித்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டுவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகை வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது ஆகிய ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல்களை நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு அடுத்து சனாதனக் கூட்டத்தின் திட்டமான பொது சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிக்கிறது. இது சிறுபான்மை மக்கள், பழங்குடி மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கும் எதிரானது. பொது சிவில் சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் குழுக்களும் சீக்கியர்கள் பார்ஸிகள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.
மனுஸ்மிருதி உள்ளிட்ட சனாதனச் சட்டங்களில் குற்றங்களுக்கான தண்டனைகூட ஒரே மாதிரியாக இல்லை, சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் தண்டனையின் அளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனு அநீதியை மனதுக்குள் மறைத்துவைத்து பூசிப்பவர்கள்தான் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்று வாய்ப்பந்தல் போடுகின்றனர். 
 
இன்றைக்கு இந்தியாவில் குற்றவியல் உள்ளிட்ட பெரும்பாலான சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளன. மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக்கூறுகளை மனதில் கொண்டே அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் சில சட்டங்களில் விதிவிலக்குகளை அனுமதித்துள்ளனர். ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் இந்துச் சட்டங்களையே பொது சிவில் சட்டம் என்ற பெயரில் அனைவர் மீதும் திணிக்கத் துடிக்கிறது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலையில், அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நரேந்திர மோடி அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பும் குறுகிய அரசியல் நோக்கு அடிப்படையிலேயே பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் துவக்கியுள்ளது.
 
இதே ஒன்றிய அரசினால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 21ஆவது சட்ட ஆணையம் இப்போதுள்ள சூழலில் பொது சிவில் சட்டம் அவசியமும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று அறிவித்துவிட்ட நிலையில், 2ஆவது சட்ட ஆணையம் கருத்துக்கேட்பு என்ற பெயரில் மீண்டும் சர்ச்சையை துவக்கியுள்ளது. 
 
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத நரேந்திர மோடி அரசு பெண்களின் நலனை பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டத்தை கொண்டுவரப்போவதாக கூறுவது கேலிக்கூத்தாகும். 
 
பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையிலான சட்டங்களை கொண்டுவரவேண்டிய அவசியமுள்ளது. அதற்கான விழிப்புணர்வும் கருத்தியல் பரப்புரையும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் பெண்ணடிமைத்தனத்தை பெரிதும் பற்றிநிற்கும் சனாதனவாதிகளால் அதைச் செய்யமுடியாது. அதனாலேயே ஒன்றிய அரசு முன்வைக்கப் போவதாக சொல்லும் பொது சிவில் சட்டம் அதற்கு எந்தவகையிலும் உதவாது என்பதை இந்தத் தெளிவரங்கம் சுட்டிக்காட்டுகிறது. 
 
இவண்,
 
மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர்.                  

ஆதவன் தீட்சண்யா
பொதுச்செயலாளர்