25 Nov 2020

அருந்ததிராய் நூல் பாடத்திட்டத்தில் தொடரும் … -பல்கலைக்கழக முடிவுக்கு - தமுஎகச வரவேற்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில மாணவர்களுக்கு எழுத்தாளர் அருந்ததிராய் எழுதியுள்ள ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’என்ற நூல் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் பிரிவான ஏபிவிபியின் மிரட்டல் காரணமாக பாடத்திட்டத்திலிருந்து இந்நூல் நீக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்திருந்தார்.

இதைக் கண்டித்து எழுத்தாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள் குரல் எழுப்பினர். தமுஎகச இணையவழியில் கண்டனக்கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் (மூட்டா) துணைவேந்தரின் போக்கினை எதிர்த்தது. நெல்லையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமுஎகச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் சார்பில் துணைவேந்தரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நவம்பர் 23 அன்று நடந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு கூட்டத்தில் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ நூல் இந்தக் கல்வியாண்டு பாடத்திட்டத்தில் பாடமாக தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதை தமுஎகச வரவேற்கிறது. கல்விப்புலங்களில் வலதுசாரிகளின் அத்துமீறலை தடுத்திட இதேபோன்ற விழிப்புநிலையும் ஒன்றுபட்ட போராட்டங்களும் எதிர்காலத்திலும் அவசியம் என தமுஎகச வலியுறுத்துகிறது.

அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

25.11.2020