17 Dec 2025

அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை

- தமுஎகச மாநிலக்குழு

பாரதியார், காந்தியடிகள், நேரு உள்ளிட்ட இந்நாட்டின் பல ஆளுமைகளை அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் வரும் போது போற்றுகின்ற செயல்கள் எவ்வளவு நடைபெறுகிறதோ, அதே அளவு அவர்களை தூற்றுவதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. பொது வாழ்வில் இருந்தவர்கள் எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த காலம் போல் வலதுசாரிகள் இந்த ஆளுமைகளை விமர்சித்தால் நமக்கு சிக்கலேதும் இல்லை. அது நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதன் பொருள் ஆகும். ஆனால் முற்போக்காளர்களாக அறியப்பட்ட சில பெரியாரியவாதிகளின் இப்படிப்பட்ட விமர்சனங்கள் சரியான செயல் ஆகாது. 

எந்த ஆளுமைகளையும் அவர்கள் வாழ்ந்த காலத்தோடு பொருத்திப்பார்ப்பதும், காலவரிசையோடு அவர்கள் செயலை மதிப்பிடுவதுமே சரியான செயலாகும். தியாகராஜர் இன்றைக்கு உயர்சாதி சார்ந்த இசையின் குறியீடாக இருக்கிறார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில்  மன்னரின் அதிகாரத்திற்கு எதிராகவே தனது பக்தி சார்ந்த இசையை பயன்படுத்தினார். கம்பர் இராமாயணத்தை எழுதினார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சோழப் பேரசும், அதன் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கும் எதிரான மனோநிலையோடே தான் விரும்பும் தேசத்தை கற்பனையில் 'அயோத்தி' என்று எழுதிப்பார்த்தார். அப்படி நம் சமூகத்தில் பாரதி அவர் காலத்தில் எழுதிய எழுத்துக்களில் சில பொருத்தமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதையும் அவர் தன் வாழ்நாளிலேயே சரிசெய்து ஒரு உன்னத இடத்திற்கு வந்து மகாகவியாக பரிணாமம் பெற்றிருக்கிறார்.

பாரதியின் எழுத்துக்களில் இரஷ்ய புரட்சி ஏற்பட்ட சூழலில் முதலில் லெனின் ஐ விமர்சித்தார். காரணம் 100ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரம் மையில் தாண்டியுள்ள இரஷ்யாவில் என்ன நடக்கிறது என்ற செய்தி அறிந்து ஒரு எழுத்தாளர் தனக்குத் தோன்றியதை எழுதினார். ஆனால் அதன் பின் இரஷ்ய சூழலை தீர விசாரித்து அதே லெனின் ஐ தன் இறுதிக் காலம் வரை போற்றிப் புகழ்ந்தார் பாரதி. சோவியத், போல்ஷெவிக் போன்ற சொற்களுக்கு தமிழ்ச் சொற்களை தன் வாழ்நாளிலேயே உருவாக்கிப் பார்த்தார்.

பாவேந்தரை பாரதி முதன் முதலில் பார்த்தது ஒரு ஆன்மீக கதாகாலஷேப நிகழ்ச்சியில் தான். தொடக்கத்தில் பாவேந்தர் முழு ஆன்மீக வாதியாகத்தான் தன் படைப்புகளை முன் வைத்தார். ஆனால் அதை வைத்து பாவேந்தரை இன்றைக்கு மதிப்பிட முடியுமா?  தன்னை பாரதிதாசன் என்று அறிவித்துக் கொண்ட பாவேந்தரை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் இவர்கள், பாரதியை மட்டும் விமர்சிப்பது என்பது பாரதியை காலவரிசையோடு பொருத்திப் பார்க்காததன் வெளிப்பாடு ஆகும். பாரதி வாழ்ந்த காலத்தில் சொந்த சாதியால் ஒதுக்கப்பட்டவர். ஆனால் இன்று அவர் பிறந்த சாதியை மட்டும் வைத்துக்கொண்டு அவர் மீது வன்மம் காட்டுவதும் பிறப்பின் அடிப்படையிலான பேதமே ஆகும்.

பொய்யயை விட மிகவும் ஆபத்தானது பாதி உண்மை. பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல. 

வலதுசாரிகள் எல்லா ஆளுமைகளையும் தங்களுக்குள் ஆலிங்கனம் செய்து தனதாக்கிக் கொள்ளும் காலம் இது. இந்தச் சூழலில் இது போன்ற உரையாடல்கள் நம்முடைய கருத்தியலுக்கு வலு சேர்க்கும் பாரதியைப் போன்ற ஆளுமைகளை வலிந்து வலதுசாரிகள் கையில் கொடுக்கும் செயலாகும்.

சமகாலச் சிக்கல்கள் குறித்துப் பேசாமல், அதை மைய அரசியலாக கொண்டுவராமல் வலதுசாரிகள் எப்படி திசைதிருப்பும் வேலையை செய்கிறார்களோ, அதே விளையாட்டை பெரியாரியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் செய்வது விபரீதமானது என்று சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எந்த வித செயல்தந்திரமும் இல்லாமல் தமிழ்ச்சமூகத்தின் ஆளுமைகளின் ஒட்டுமொத்த பங்களிப்பை மதிப்பீடு செய்யாமல் அவர்களிடம் உள்ள சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்துவது பாசிச எதிர்ப்பை  பலவீனப்படுத்தவே செய்யும். சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக்கூடாது.

வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத்தில், முற்போக்காளர்கள் முகாமிலிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இவைகளை உடனே தடுப்பது, தவிர்ப்பது காலத்தின் தேவை ஆகும். 


மதுக்கூர் இராமலிங்கம்
தலைவர்

களப்பிரன்
பொதுச்செயலாளர்.

10 Sept 2025

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2024

 

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2024


2024ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்குத் தேர்வான நூல்கள், ஆளுமைகள் விவரத்தை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.

முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான  கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது

§  சிகரம் ச. செந்தில்நாதன் அவர்களுக்கு

விருதுத்தொகை ரூ.1,00,000/ - (ரூபாய் ஒரு இலட்சம்)

தேர்வாகியுள்ள நூல்/ குறும்படம்/ ஆவணப்படம்/ ஆளுமைக்கு சான்றிதழுடன் விருதுத்தொகை ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்) 2025 அக்டோபர் 12 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

கே.முத்தையா நினைவு விருது : தொன்மைசார் நூல்

  • ஆதிதிராவிட மித்திரன் - அறியப்படாத அரசியல் ஆயுதம்

தொகுப்பாசிரியர்: ப.குமார், வெளியீடு: சிந்தன் புக்ஸ் 


கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது : நாவல்

  • அல்லிமுலை ஆனைமாடன்

கு.கு.விக்டர் பிரின்ஸ், வெளியீடு: சால்ட்

 

சு.சமுத்திரம் நினைவு விருது : விளிம்புநிலை மக்கள்குறித்த படைப்பு

  • ஊத்தாம்பல்லா

செஞ்சி தமிழினியன், வெளியீடு: வேரல்

 

இரா.நாகசுந்தரம் நினைவு விருது : அல்புனைவு நூல் (நான் ஃபிக்‌ஷன்)

  • மாஞ்சோலை: 1349/2 எனும் நான்

வழக்குரைஞர் இ.இராபர்ட் சந்திரகுமார், வெளியீடு: விகடன் பிரசுரம்

 

வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது :

கவிதைத் தொகுப்பு

  • மலைச்சி

நந்தன் கனகராஜ், வெளியீடு: தமிழ்வெளி

 

அகிலா சேதுராமன் நினைவு விருது : சிறுகதைத் தொகுப்பு

  • செந்நிலம்

ஜெயராணி, வெளியீடு: சால்ட்

 

வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது : மொழிபெயர்ப்பு நூல்

  • சீதாயணம் (வங்காள நாவல்)

மல்லிகா சென்குப்தா, தமிழில்: ஞா.சத்தீஸ்வரன் வெளியீடு: அணங்கு

 

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது :

குழந்தைகள் இலக்கிய நூல்

  • காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்

குருங்குளம் முத்து ராஜா, வெளியீடு: எதிர்

 

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது : மொழிவளர்ச்சிக்கு உதவும் நூல்

  • சங்கத் தமிழ்ச் சொற்கள் 

பி.பாலசுப்பிரமணியன், வெளியீடு: தேநீர்

 

ஜனநேசன் நினைவு விருது: எழுத்தாளரின் முதல் நூல்

  • தொரசாமி - (நாவல்)

ஜெ.அன்பு, வெளியீடு: அறம்

 

மருத்துவர் சிவக்கண்ணு நினைவு விருது: அறிவியல் மனப்பாங்கை உருவாக்கும் நூல்

  • அசிமவ்வின் தோழர்கள்

'ஆயிஷா' இரா.நடராசன், வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்

 

பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் 

(பின்னர் அறிவிக்கப்படும்)

 

என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்

§  மாஞ்சோலை – சாமுவேல் அற்புதராஜ்

 

மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை

§  கவிஞர் சுகிர்தராணி

 

மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது:

நாட்டுப்புறக் கலைச்சுடர்

§  திரு. சேகர், மண் மத்தளக் கலைஞர் (கடவு மத்தாட்டம்), கரட்டாங்காட்டுப்புதூர், ஈரோடு

 

மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்

  • அன்புமணி, புதுச்சேரி

 

த.பரசுராமன் நினைவு விருது: நாடகச்சுடர்

  • கருஞ்சுழி ஆறுமுகம்

 

கருப்பு கருணா நினைவு விருது: நுண்கலைச்சுடர்

  • சிற்பி இராஜன்

  

வாழ்த்துகளுடன்,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்  ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்



9 Sept 2025

பதினாறாவது மாநில மாநாட்டு இலட்சினை வெளியீடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 16 ஆவது மாநில மாநாடு

மாநாட்டு இலட்சினை வெளியீடு

#tnpwaa16thconference
#தமுஎகச_16ஆவது_மாநிலமாநாடு



10 Feb 2025

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2024

2024ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் விருதுகளுடன் 
*தோழர் கருப்பு கருணா* பெயரால் நுண்கலைகளுக்கான விருதும்,  
*தோழர் ஜனநேசன்* பெயரால் எழுத்தாளரின் முதல் நூலுக்கான விருதும் இவ்வாண்டு முதல் இணைகின்றன.  

2024ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் மூன்று பிரதிகள் 2025 மார்ச் 10ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்) 
மதுரை- 625001  தொலைபேசி: 0452-2341669 


குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தனிநபர் இணைய இணைப்புகளை 73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும். 

தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் விருதுத்தொகை ரூ.10,000/,  சான்றிதழ்  ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும். 
விருதுகள் 

1. கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல்
2. கே.பி. பாலச்சந்தர் நினைவு விருது: நாவல் 
3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு 
4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: அல்புனைவு  (நான் ஃபிக்‌ஷன்) நூல் 
5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு 
6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு 
7. வ.சுப. மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு 
8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது:
 குழந்தைகள் இலக்கிய நூல்  
9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் 
10. ஜனநேசன் நினைவு விருது: எழுத்தாளரின் முதல் நூலுக்கானது 
(அச்சு / கையெழுத்துப் பிரதி)

**
11. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் 
12. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்

பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:   

13. மு.சி. கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது: 
நாட்டுப்புறக் கலைச்சுடர்
14. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்
15. த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்
16. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை
17. கருப்பு கருணா நினைவு விருது: நுண்கலைச்சுடர் 

வாழ்த்துகளுடன்,
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத் தலைவர்

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

10.02.2025

27 Aug 2024

மதச்சார்பின்மைக்கு மாறாக பழனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை திரும்பப்பெறுக!

தமுஎகச வலியுறுத்தல்

இந்து சமய அறநிலையத்துறையின் முன்னெடுப்பில் பழனியில் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில், 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சித்த மருத்துவத்தை இனிவரும் காலங்களில் தமிழர் சித்த மருத்துவம் என்று அழைத்திட தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தும் பழனியில் தமிழர் சித்த மருத்துவர் ஆராய்ச்சி மையம் அமைத்திட பரிந்துரைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் வரவேற்கத்தக்கவை.

கோவில்களில் திருப்பணி மேற்கொள்வது தொடர்பான சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது துறை சார்ந்த நடவடிக்கை என்ற அளவில் பொருத்தமானதே. ஆனால், முருகன் திருக்கோவில்களில் மாணவ-மாணவிகளைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, இந்தத்துறையின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்துவது, துறையின் கீழ் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி போட்டிகள் நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

கல்வி நிலையங்கள் சிலவற்றை இந்துசமய அறநிலையத்துறை நடத்தினாலும் மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இக்கல்வி நிலையங்கள் நடைபெறவேண்டும். மத போதனைக்காக இந்தக் கல்வி நிலையங்கள் உருவாக்கப் படவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். மாறாக பள்ளி மாணவர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் போன்றவற்றை கல்வி நிலையங்களே நடத்துவது என்பது மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

மத நம்பிக்கை என்பது தனிமனிதர்களின் விருப்பத்தேர்வாக இருக்கவேண்டுமேயன்றி எந்தவொரு மதக்கோட்பாட்டையும் புகுத்துவது மதச்சார்பற்ற அரசுகளுக்கு பொருத்தமானது அல்ல.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கல்வித்துறையை காவிமயமாக்கவும் கார்ப்பரேட் மயமாக்கவும் துடிக்கிறது. ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்காத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்க மறுத்து பழி வாங்குகிறது. தமிழ்நாடு அரசு தமிழகத்திற்கென்று தனி கல்விக்கொள்கை என்று அறிவித்து அதற்கான நிபுணர் குழுவையும் அமைத்து அதன் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. அதைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்நிலையில், ஒன்றிய அரசு பாணியிலேயே மாநாட்டில் சில தீர்மானங்கள் அமைந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. அனைத்துச் சாதியினரும் அனைத்துக் கோவில்களிலும் பாலின வேறுபாடின்றி அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை விரைவுபடுத்துவதும் தமிழில் குடமுழுக்கு உட்பட வழிபாட்டில் தாய்மொழியை முதன்மைப்படுத்துவதும், காலத்திற்கேற்ப மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளாகும். அதே நேரத்தில், முத்தமிழ் முருகன் மாநாட்டில் மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள  மூன்று தீர்மானங்களையும் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்

 ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

27.08.2024